மதுரை: ஆக்சிஜன் நிரப்ப விமானம் மூலம் ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ராட்சத சிலிண்டர்கள்
மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு 5 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டது.
மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம், திருச்சி பெல் இரும்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 5-காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட டேங்கர் லாரிகள் விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக நோயாளிகள் சுவாசிக்க தேவையான பிராண வாயு ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க திருச்சியில் அமைந்துள்ள இரும்பு தொழிற்சாலையான பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 16,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருச்சியில் இருந்து லாரி மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர் அவை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் மூலம் மதுரையில் இருந்து மதியம் 12.00 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பப்பட உள்ளது. அதன்பிறகு தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.