மதுரை-கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள் இனி ஒரே நிரந்தர ரயிலாக இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

மதுரை-கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள் இனி ஒரே நிரந்தர ரயிலாக இயக்கப்படும் - தெற்கு ரயில்வே
மதுரை-கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள் இனி ஒரே நிரந்தர ரயிலாக இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

மதுரை- பழனி மற்றும் பழனி- கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்டு வந்த இரு சிறப்பு ரயில்கள் இனி ஒரே நிரந்தர ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை - பழனியிடையே ஒரு விரைவு சிறப்பு ரயிலும், பழனி - கோயம்புத்தூரிடையே ஒரு சிறப்பு ரயிலும் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தது. மதுரையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பழனியில் சிறிது நேரம் காத்திருந்து புதிய ரயிலாக புறப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 01.15 மணிக்கு சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - பழனி இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06463) பழனி - மதுரை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06479) தனித்தனியாக இயங்கி வந்தன. இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு பழனியில் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் புறப்பட்டு மதுரைக்கு இரவு 07.35 மணிக்கு வந்து சேரும்.

தற்போது இந்த சிறப்பு ரயில்கள் ஒரே வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டு செப்டம்பர் 1 முதல் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் மதுரை விரைவு ரயில் கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இவ்வாறு ஒரே ரயிலாக இயக்கப்படுவதன் மூலம் மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்களம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com