சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளர் மோகன், இன்று காலை திடீரென்று மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
சென்னை பத்திரிகையாளர் சங்க (எம்யுஜே) பொது செயலாளர் மோகன் (54). மூத்த பத்திரிகையாளரான இவர், சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகத் தெரிகிறது.
பத்திரிகையாளர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் மோகன். அவர்களுக்குப் பல்வேறு பலன்களை, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெற்றுத் தந்ததில் மோகனின் பங்கும் முக்கியமானது. கடந்த ஒரு வருடத்துக்கு முன், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது.மறைந்த மோகனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

