சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை சென்னை மாவட்ட போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை மகிளா நீதிமன்றம் தொடங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம்சாட்டபட்ட 17 பேருக்கும் தனி தனியாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் 36 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டன.
கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்தையடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார். குற்றம்சாட்டபட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார். இதனையடுத்து 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்துள்ளது.