\
சென்னை உயர்நீதிமன்றம் - பச்சையப்பன் கல்லூரி
சென்னை உயர்நீதிமன்றம் - பச்சையப்பன் கல்லூரிPT

ஆ.ராசா பங்கேற்ற நிகழ்வை நடத்திய பச்சையப்பன் கல்லூரி பேராசியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து!

பச்சையப்பன் கல்லூரியின் வாசகர் வட்டம் சார்பாக திமுக எம்பி ஆ.ராசா பங்கேற்ற நிகழ்வை நடத்திய பேராசியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
Published on

செய்தியாளர் - சுப்பையா

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 'சொல்' ஆண்டு மலர் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பங்கேற்று உரையாற்றியிருந்தார்.

NGMPC059

இந்நிலையில், பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த முனைவர் ஆ.தே.ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முனைவர் ரேவதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நிகழ்ச்சி நடத்த கல்லூரி அனுமதி அளித்த பின்னரே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக தவறான காரணத்தைக்கூறி தாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டது உச்சபட்ச நடவடிக்கை எடுக்க எனவும் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். முன்னதாக, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியரின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com