``90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை

``90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை
``90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை
காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காவல்துறையில் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். நாமக்கல் நீதிமன்றமும் அதை ஏற்றது. அதை தொடர்ந்து நாமக்கல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வசந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. இதன்படி, வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் `ஆய்வாளர் பாக்கியலட்சுமி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறுவிசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து அறிக்கை அளித்திருக்கிறார்’ எனக் கூறி, பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “நில விற்பனை தொடர்பான சிவில் வழக்கு என்பதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மறுவிசாரணையும் உரிய முறையில் நடத்தப்பட்டது” என வாதிட்டார். மேலும், தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ‘நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை’ எனக் கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.
“நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்த போதே விசாரித்திருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, “தற்போது காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்” எனக்கூறி வேதனை தெரிவித்தார். 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக கூறிய நீதிபதி, ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com