தமிழக கோயில்களில் யாரெல்லாம் அர்ச்சகர்கள் ஆகலாம்?: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

தமிழக கோயில்களில் யாரெல்லாம் அர்ச்சகர்கள் ஆகலாம்?: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
தமிழக கோயில்களில் யாரெல்லாம் அர்ச்சகர்கள் ஆகலாம்?: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக 'இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள்' 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில் 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். அதில் மனுதாரர்கள் தரப்பில், `கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது’ என்றும் `அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என்றும் வாதிடப்பட்டது.

மேலும் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், `கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும்’ என கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோயில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

நேற்று முன்தினம் (ஆக.20-ம் தேதி) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிபிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தீர்ப்பளித்தது.

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, `ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களில் அரசு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க முடியாது’ என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தார். மேலும், `எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய அரசு ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க வேண்டும்’ என்று கூறி, அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை முடித்து வைத்தனர். அறநிலையத்துறை ஆணையர், அரசு நியமிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஐவர் குழுவில் இடம்பெறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com