பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க கோரிய வழக்கில், ‘அரசமைப்பு சாசன வழிகாட்டுதல்’ படியே பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் ஆகியோருக்கென 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அரசியல் சட்டத்தின் 243 டி உட்பிரிவு 3, மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வதாகவும், அந்த வகையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஆனால், வார்டு வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டார். இதையடுத்து, வார்டு வாரியாக இல்லாமல், மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாக கருதி ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மண்டல வாரியாக எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முகேஷ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com