`நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்கவும்’- நீதிமன்றம் உத்தரவு

`நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்கவும்’- நீதிமன்றம் உத்தரவு
`நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்கவும்’- நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் சூரப்பாவுக்கு ஆணைய அறிக்கையை வழங்க உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையக் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா வழக்கு தொடர்ந்திருந்தார். சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலைக்கு நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுனருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் அவர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, `அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது?’ என கேள்வி எழுப்பியதுடன், `வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சமபந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும்’ என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து “அறிக்கை வழங்க மறுக்க முடியாது” என்று தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியும் எனவும் தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான பணி என்றும், அரியலமைப்புச் சட்ட பணி இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கபட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் “அண்ணா பல்கலைக்கழக வேந்தருக்கு அனுப்பும் முன் சூரப்பாவுக்கு நீதியரசர் கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை வழங்க வேண்டும். விசாரணை அறிக்கை தொடர்பான விளக்கத்தை 2 வாரங்களில் அரசுக்கு சூரப்பா வழங்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com