’90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகள்’ - தனிநீதிபதியின் கருத்தை நீக்கி ஐகோர்ட் உத்தரவு

’90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகள்’ - தனிநீதிபதியின் கருத்தை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
’90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகள்’ - தனிநீதிபதியின் கருத்தை நீக்கி ஐகோர்ட் உத்தரவு

காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக, தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், தவறான புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறு விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வசந்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

மறுவிசாரணை நடத்தப்பட்டு, சிவில் வழக்கு என்பதால் முடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்ததை அடுத்து,
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த தனி நீதிபதி வேல்முருகன், தற்போது காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகவும் 10 சதவிகித அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஊழல்வாதி அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டார். உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் இந்த கருத்துக்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com