’10, 11, 12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தவிர்க்கலாம்’- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

’10, 11, 12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தவிர்க்கலாம்’- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
’10, 11, 12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தவிர்க்கலாம்’- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வழக்கில் அவர் ‘கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதேநேரம் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதனால் அந்த மாணவர்கள் எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் நிலவிவருகிறது. அதை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர். மற்றபடி நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. அந்த விஷயத்திலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் அதில் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற்குட்பட்டதுதான்” என்று தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், “மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கவும். ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தவும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்களும், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்” என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் ”அரசின் கொள்கை முடிவை மீறி  பள்ளிகளை மூடும்படி உத்தரவிட முடியாது. பள்ளிகள் செயல்படுவதால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், மரணம் அடைந்துள்ளார்கள் என்ற விவரங்கள் ஏன் இடம்பெறவில்லை?” எனக் கேள்வி எழுப்பினர். வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அப்துல் வகாபுதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com