மோடி- ஜின் பிங் சந்திப்பு: இடையூறின்றி பேனர் வைக்க அனுமதி
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், மாமல்லபுரத்தில் 11 ஆம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி, மத்திய, மாநில அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், பேனர் வைக்க அனுமதி கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட் டிருந்தது.
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.
இந்த வழக்கு 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர் மனுதாரர்களாக உள்ள திமுக, மற்றும் டிராபிக் ராமசாமி வழக்கறிஞர்கள் பேனர் வைக்க அனுமதியளிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க அனுமதி அளித்தனர்.