அதிமுக அலுவலக சீல் வழக்கு: காரசார விவாதத்தில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

அதிமுக அலுவலக சீல் வழக்கு: காரசார விவாதத்தில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அதிமுக அலுவலக சீல் வழக்கு: காரசார விவாதத்தில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஒபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, ராயப்பேட்டை காவல்துறை பதிவுசெய்த வழக்கு அடிப்படையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என ஒ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ராஜ் திலக் ஆஜராகி தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை எனவும், வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது எனவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும், மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார். சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை எனவும், என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார். கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்துச்செல்ல வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ. ரமேஷ் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது எனவும், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும், கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது; இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை எனவும், அப்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் பழனிச்சாமி தரப்பின் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனத் தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை (ஜூலை 20) பிறபகல் 2.15 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com