கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் மாறிவிட்டது: நீதிபதிகள் வேதனை
கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் மாறிவிட்டது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை அன்னூரில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அகற்றும்படி பேரூராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மொபைல் கோபுரம் அமைக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்காவிட்டால் அனைத்து ஆவணங்களுடன் ஒரு மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், “நாட்டில் 99 சதவீத மக்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர். கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் மக்களின் உடல் அங்கமாக மாறிவிட்டது. அதேபோல பல்வேறு குற்றங்களுக்கும் செல்போன்கள்தான் முக்கிய காரணமாக உள்ளது. செல்போன்கள் கதிர் வீச்சு, உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ குடும்பத்தினரிடையே பிரிவை ஏற்படுத்துகிறது” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.