தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயம்? - அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயம்? - அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயம்?  - அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன என்பதை கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் பல கோவில்களில் இந்த பதிவேடுகள் காணாமல் போனதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை அறநிலையத் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதில் பல கோவில்களின் சொத்துக்கள், சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளதாக கூறி, சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சிபிசிஐடி, தொல்லியல்துறை அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கடத்தப்படும் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் உடந்தையுடன் சிலைகள் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரினார்.

இதையடுத்து, எந்தெந்த கோவில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளன என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com