முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு - நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறையால் தேர்தலில் முறைகேடுகள் நடக்கவாய்ப்புள்ளது. வேண்டுமானால், முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என திமுக குறிப்பிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையை எதிர்த்து ஊனமுற்றோர் உரிமைகளுக்காக போராடும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் தலைவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டி.எம்.என் தீபக்(40) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.