நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு செய்தார். எதிர்கட்சியினர் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். சட்டப்பேரவையில் அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் திருத்தம் மேற்கொண்டதாகவும் ஸ்டாலின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.