உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்pt web

“தமிழக மீனவர்கள் கைது; ஏன் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை”-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளதால், அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் ஜனவரி 22ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் L.T.A.பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் PT

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் L.P.மௌரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்னை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதையடுத்து, மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com