ஜெயலலிதாவின் மகன் என கூறியவரை கைது செய்ய உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்தவரை கைது செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தான் ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என காவல் துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து வழக்கு பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தான் சோபன் பாபு மற்றும் ஜெயலலிதாவின் மகன் என்றும், தன்னை 1986ல் ஜெயலலிதா தத்துக்கொடுத்து விட்டதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். சசிகலா மற்றும் தினகரனால் தனக்கு ஆபத்து என்றும் எனவே போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து அவர் கொடுத்த ஆவணங்களை ஆராய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை அந்த ஆவணங்கள் போலி என்று சொன்னதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.