தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செயலிழந்துள்ளது- உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை செயலிழந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு மாநகராட்சியில் என்னென்ன சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். லஞ்ச ஒழிப்பு புகார்களை பெறுவதற்கும், கையாள்வதற்கும் முறையான நடைமுறை கூட இல்லை என்று கூறிய நீதிபதிகள், லஞ்சப் புகாரில் சிக்கும் அதிகாரிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
லஞ்சம் பெறுபவர்கள் மீதோ, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பவர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு துறை தமிழகத்தில் முழுவதும் செயலிழந்துள்ளது என கண்டனம் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவை கலைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவிட்டனர்.