சந்திர கிரகண நிகழ்வு.. நேரில் கண்டுகளித்த மக்கள்.. தவம் செய்த நயினார் நாகேந்திரன்!
சந்திர கிரகண நிகழ்வை கண்டு மகிழ்ந்த மக்கள், விண்வெளியின் அதிசயத்தை நேரில் பார்த்த திருப்தியை வெளிப்படுத்தினர்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த வானியல் அற்புத நிகழ்வான முழு சந்திர கிரகணத்தை உலகம் முழுவதும் மக்கள் கண்டு ரசித்தனர். துருக்கி, எகிப்து , கென்யா, ஈரான், ஜோர்டன், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முழுமையாக காட்சியளித்த சிவப்பு நிலாவைக் காண மக்கள் பொதுவெளியில் ஒன்று கூடினர்.
இந்தியாவிலும் நேற்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. சிவப்பு நிலா என அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். நேற்று இரவு 8:58 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், அதிகாலை 2:25 மணி வரை நீடித்தது. இரவு 11:01 மணி முதல் 12:23 மணி வரை சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலில் மூழ்கி, செந்நிறத்தில் காட்சியளித்தது. இந்த வானியல் அற்புதத்தைக் காண தமிழகம் மட்டுமல்லாது டெல்லி, மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களிலும் மக்கள் ஆர்வமாகக் குவிந்தனர். இந்த ஆண்டின் மிக அழகான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இந்த சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது.
முழு சந்திர கிரகணத்தை சென்னை வேளச்சேரியில் பொதுமக்கள் வெறும் கண்களால் கண்டு ரசித்தனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்தபோது, பூமியின் நிழல் சந்திரனை மறைத்ததால், இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது. நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கிய கிரகணத்தில் சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில் காணப்பட்டதால், அது ’பிளட் மூன்’ என அழைக்கப்பட்டது. இந்த அரிய நிகழ்வை கண்டு மகிழ்ந்த மக்கள், விண்வெளியின் அதிசயத்தை நேரில் பார்த்த திருப்தியை வெளிப்படுத்தினர். சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டு சந்திர கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர்.
வானம் தெளிவாக இருந்ததால், பலர் சிவப்பு நிறத்தில் தெரிந்த சந்திரனை ரசித்தனர். சந்திர கிரகணத்தையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமக் கடலில் தவம் செய்தார். கிரகணம் தொடங்கிய நேரத்தில் கடலில் இறங்கிய நயினார் நாகேந்திரன், அதிகாலை 1.27 மணி வரை சந்திரன் முழு கிரகண நிலையை அடையும் வரை கடலில் தவம் மேற்கொண்டார். சுமார் மூன்று மணி நேரம் கடல் தவத்தில் இருந்த அவரை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டனர். அந்நேரம் புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதி வழிபாடு நடத்தினர். கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அரிய அனுபவமாக அமைந்தது.