பிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்
சமீபகாலமாக முகநூலில் பதிவிடப்படும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் எடுக்கப்பட்டு விடுவதாக புகார் எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முக்கியமான ஊடகமாக உள்ளது. கோடிக் கணக்கானவர்கள் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் தங்களுக்கு பிடித்தமானவர்களின் படங்களை பதிவிடுகின்றனர். அந்த வகையில்தான் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களையும் பலரும் பதிவிடுகின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக முகநூலில் பதிவிடப்படும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் எடுக்கப்பட்டு விடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலரும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இலங்கையை அடுத்து தமிழகத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பிரபாகரனின் படத்தை தங்களது ஃபேஸ்புக்கில் பதிவிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தப் புகார் குறித்து ஃபேஸ்புக் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘விடுதலை புலிகள் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் பிரபாகரன் படத்தினை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார்.
வன்முறை, பிரிவினையை தூண்டும் கருத்துக்கள் பதிவிடப்படுகிறதா என வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அந்தந்த நிறுவனங்கள் சமீபகாலமாக தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் அரசே சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தினர். தங்களுக்கென்று சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில், ஒத்துவராத விஷயங்களை நீக்கும் பணிகளையும் உடனடியாக செய்து வருகின்றன.

