திருத்தணி | எதிர்ப்பு தெரிவித்த குடும்பம்... ‘குடும்பஸ்தன்’ பாணியில் நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!
செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த ஒரு இளம் ஜோடி, மலர் மாலை மாற்றிக் கொண்டனர். தொடந்து இளம்பெண் கழுத்தில் தாலி கட்ட சென்றுள்ளார் அந்த இளைஞர். அப்போது சினிமா பாணியில் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தினர் அங்கு வந்தனர்.
இதையடுத்து மணக் கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, “எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்” என இளைஞரை நோக்கி கூச்சலிட்டனர். மேலும் மணக் கோலத்தில் இருந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது இளைஞரின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென இளம் பெண் கழுத்தில் இளைஞர் தாலி கட்டிவிட்டார்.
இதற்கிடையே தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இருவரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பொதட்டூட்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி (21), பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா (19) ஆகிய இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், அவர்கள் காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இவர்களில் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்தனர். இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.