”ஆள்நடமாட்டம் இல்லா இடத்திற்கு செல்ல வேண்டாம்“ - மர்ம கும்பலிடம் சிக்கிய காதலர்கள்
நெல்லை அருகே ஒரு காதல் ஜோடி மர்ம கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப் பகலில் காதல் ஜோடியை மிரட்டி முட்டிபோட வைத்ததோடு, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கும் இந்த துணிகர சம்பவம், நெல்லை புறநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடந்துள்ளது.
ரெட்டியார்பட்டி அருகே மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இடத்தை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். இந்த இடத்தில் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் வாடிக்கை. காதலர்களுக்கும் இந்த இடம் பொழுதுபோக்கு தலமாக திகழ்கிறது. அப்படித்தான் ஒரு மாலை நேரத்தில் இங்கு வந்த இளம் காதல் ஜோடிகள், சமூக விரோத கும்பலிடம் சிக்கியுள்ளனர்.
காதலர்களை மிரட்டிய அந்த கும்பல் பதிவு செய்த வீடியோ, தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட காதலனை விசாரித்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் தங்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அருணாச்சலம் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு காதலர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.