பாம்பை காப்பாற்ற பிரேக் போட்டதால் விபரீதம்: லாரி டிரைவர், கிளீனர் உயிரிழப்பு
ஓமலூர் அருகே நடைபெற்ற இருவேறு விபத்துகளில் மூன்றுபேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்திற்கு காரணமான பாம்பு ஒன்றும் உயிரிழந்துள்ளது. இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாச சமுத்திரம் அருகே 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றிருக்கின்றன. முதலில் சென்ற லாரி மக்காச்சோளம் ஏற்றிச் சென்றது. இதை தனசேகர் என்ற ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். அதைத் தொடர்ந்து வந்த லாரி இரும்பு தகடுகளை ஏற்றி வந்துள்ளது. அதில் ஓட்டுனர் தங்கதுரை என்பவரும் உதவியாளர் ரமேஷூம் சென்றிருக்கின்றனர்.
தனசேகர் ஓட்டிச் சென்ற லாரியின் முன் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றுள்ளது. அதன் மீது லாரி ஏறிவிடாமல் தடுக்க தனசேகர் திடீரென பிரேக் போட்டிருக்கிறார். இதனால் பின்னால் தொடர்ந்து வந்த லாரியின் ஒட்டுனர் தங்கத்துரையும் பிரேக் பிடித்திருக்கிறார். இதில் தங்கதுரை ஏற்றி வந்த இரும்பு தகடுகள் முன்புறத்தை நோக்கி பாய்ந்திருக்கிறது. இதில் தங்கதுரையும், உதவியாளர் ரமேஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமான பாம்பும் லாரி சக்கரம் ஏறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிபட்டி காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து விசாரணை மேற்கொண்டனர்.