கரூரில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட போலி எண் பலகை பொருத்தப்பட்ட 5 லாரிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடத்திய வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் லால்பேட்டையில், மணல் லாரிகளை வட்டாரப்போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் சோதனை செய்தபோது, 5 லாரிகளில் வண்டியில் இருந்த எண் பலகையில் இருந்த எண்ணும், வாகனப் பதிவு சான்றிதழில் இருந்த எண்ணும் வேறு வேறாக இருந்தது. வாகன ஓட்டுநர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ஆன் லைன் மூலம் மணல் பெறுவதற்கு போலியான எண்களை பதிவு செய்து மணலை பெற்றுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கரூரில் மாயனூர், சிந்தலவாடி ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் அரசு மணல் குவாரிகளில் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாமக்கலைச் சேர்ந்த 2 லாரிகள், கரூர் 1, கூடலூர் 1, ஆண்டிப்பட்டி 1 என 5 லாரிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.