
திமுக அரசு தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் கொடுக்கிறோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாகத்தான் 28 மாதங்கள் கழித்து திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் கொடுக்கிறது. மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கப்போகிறோம் என்று சொல்கிறார்கள், குடும்ப தலைவிகள் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. தேர்தலுக்காக கொடுக்கிறார்கள். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மாணவர்களின் நலன் கருதி லேப்டாப் கொடுக்கவில்லை. தேர்தல் வருவதால் வாக்குகளுக்காக வாக்குறுதி கொடுக்கிறார்.
விவசாயிகளுக்கு அநிதி இழைக்கும் அரசாங்கம் திமுக அரசாங்கம். தொடர்மழையால் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளிய அரசு திமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்தபின் விலைவாசி உயர்ந்துவிட்டது,. கட்டுமாணப்பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எனக்கு முன் பேசியவர்கள் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்து தெளிவாக பேசினார்கள்., திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டுமென்பதற்காகத்தான் எம் ஜி ஆர் அதிமுகவை தொடங்கினார்கள். அதன்பின் அம்மா பல்வேறு சோதனைகளைத் தாங்கி கழகத்தை கட்டிக்காத்தார்கள். பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டுவந்தார்கள் நமது இருபெரும் தலைவர்கள்.
ஆட்சியில் இருக்கும்போதும் ஊடகத்தினர் நம்மை விமர்சனம் செய்தார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மைத்தான் விமர்சிக்கிறார்கள். அதிமுக இருப்பதால்தான் ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் நிலை இருக்கிறது.
எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நம்மையும் நாட்டு மக்களையும்தான் வாரிசாகப் பார்த்தார்கள். எண்ணெற்ற திட்டங்களை அவர்கள் கொடுத்ததால்தான் இன்றும் அதிமுகவை யாராலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற்காக நம்முடன் இருந்தவர்களே எதிரிகளோடு கைகோர்த்து சோதனையை உருவாக்கினார்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தபோது தற்போதைய முதலமைச்சரும் அவரது சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்துகொண்டார் என்பதை தொலைக்காட்சியில் தெரிந்திருக்கும். அதையெல்லாம் கடந்து நாம் வெற்றி பெற்றோம். அதை பொறுத்துகொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தவர்தான் ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்போது ஸ்டாலின் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.
பல்வேறு சதித்திட்டங்களைத் தாண்டி ஆட்சி அமைத்தோம். இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம் ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை. அத்தகைய ஆட்சியை கொடுத்தது அதிமுக. அதிமுக – பாஜக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். அதைத்தாண்டி எதாவது ஆட்சியில் குறை சொல்ல முடிந்ததா? பொற்கால ஆட்சியை கொடுத்தது அதிமுக அரசு. அதே ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வர நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்பியுமான சிவி சண்முகம் உரையாற்றுகையில், “பொதுக்குழு நடைபெறும் இந்த மண்டபம் அதிமுக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளை சந்தித்திருக்கிறது. அதிமுக இருக்காது, காணாமல் போய்விடும் என்று பல்வேறு கட்டுக்கதைகளை ஸ்டாலின் அரசு பரப்பி வருகிறது” எனத் தெரிவித்தார்.
அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து எம் ஜி ஆரைப் பார்த்து நடிகர் நாடாள முடியுமா எனக் கேட்டார்கள் என்று தெரிவித்த சண்முகம் அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பார்த்தும் ஆட்சி அமைக்க முடியுமா என்று கேட்டார்கள் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “எடப்பாடிக்கு ஆளத் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? எனக் கேட்டவர்களுக்கு மத்தியில் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மைக் குறிவைத்து அதிமுகவை அழித்துவிட வேண்டுமென நினைக்கிறார்கள். எதிரி திமுக என்பது தெரியும். துரோகி யார் என்றும் தெரியும். நம்மோடி உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம்தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல்வேறு சதித்திட்டங்களை முறியடித்து அதிமுகவை எதுவும் செய்ய முடியாது எனும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்!
நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குடி பிரதிபலிக்கிறது! நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்கப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிய, தென்னக நதிகளின் இணைப்பு மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பையும், ஆனைமலையாறு-பாண்டியாறு புள்னம்புழா வரை திட்டத்தைத் தொடர்வதற்கு அக்கறை இல்லாமலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்தத் தவறியும், மேகதாது அணை கட்டுவதாகச் சொல்லும் நடவடிக்கைகளை தடுக்கத் தவறியும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தவறியும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தவறியும், உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் திமுக அரசை, இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
சமூக நீதியை காவு கேட்டும் திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் நாடே வெட்கித் தலைகுனிகிறது! ஜாதிகள் அற்ற சமத்துவத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது கொள்கைகளாகும்! இவற்றிற்கு மாற்றாக, பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்!
விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுக என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு, ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
2021ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு ,சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்" என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கண்டனம்!
சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் திமுக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்!
படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வரும் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டும் தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் திமுக அரசுக்கு கண்டனம்!
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்குக் கண்டனம்
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் பாட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம்!
விவசாயிகள் விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்து வழிவகை செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென்று திமுக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. தானும் டெல்டா காரன் என்று தப்பட்டம் அடித்துக்கொண்டு விவசாயிகளுக்கு கண்ணீரைத் தந்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்குக் கண்டனம்.
ஜனநாயகத்திற்கு தேர்தல் பொன்மகுடம். மக்களாட்சி தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையை நிலைநிறுத்தும் எஸ் ஐ ஆரை அதிமுக வரவேற்கிறது. முறைக்கேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லுமுல்லுகளை நீக்கி தகுதியான வாக்காளர் பட்டியல்களை வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போதும், தொடர்மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, அதை பாதுகாப்பாக எதிர்கொள்வதிலும், மக்களை பாதுகாப்பதிலும் தோல்வி அடைந்துவருகிறது திமுக அரசு..
(i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது!
கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்!
(il) சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்!
வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிசாமிக்கு இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது!
முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மாணங்களை வாசித்தார்.
பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது!
எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு சென்றடைந்த நிலையில் தாமதமாக வந்த பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நுழைவாயில் முன்பு உள்ளே அனுமதிக்க கோரி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை மண்டபத்தில் இரண்டு வாசலையும் மூடியதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மதில் சுவர் ஏரி குதித்து சென்றதால் பரபரப்பு நிலவியது.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல சிலர் முயன்ற நிலையில் பலரும் கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்து சென்ற நிலையில் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மறைந்த மூத்த தலைவர்கள், பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிரணி செயலாளருமான வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அவர் கூறுகையில், “அம்மாவின் ஆன்மா இதே மண்டபத்தில் எடப்பாடியாரின் உருவத்திலே நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆனாலும், தாஜ்மஹால் ஆனாலும் அதன் உறுதி அஸ்திவாரத்தில் இருக்கிறது. அதேபோல் அதிமுகவின் வலிமை அமைச்சர்களால் அல்ல, தலைமை கழக செயலாளர்களால் அல்ல. எதிரே உட்கார்ந்திருக்கும் நீங்கள்தான் அஸ்திவாரம். கொடியும் நீங்கள்தான்; கொடிமரமும் நீங்கள்தான். நீங்கள் இருக்கும் வரை எந்த கொம்பனும் இந்த கட்சியை அசைத்துவிட முடியாது. சத்துணவுத்திட்டம் இருக்கும் வரை எம்ஜிஆர் பெயர் இருக்கும் தாலிக்குத் தங்கம் என்று சொல்லும் வரை அம்மாவின் பெயர் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரிகள் இருந்தார்கள் ஆனால் துரோகிகள் இல்லை என தெரிவித்த வளர்மதி, எடப்பாடி பழனிசாமிக்கோ எதிரிகளும் இருக்கிறார்கள்.. துரோகிகளும் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். "இந்த துரோகிகள் சாக்ரடீசுக்கே விஷம் கொடுத்தவர்கள். ஏசுவை சிலுவையில் அறைந்தவர்கள். கும்பிட்ட கைகள் கூர்வாளை ஏந்தி வந்த புரூட்டஸ்கள். அருவியில் குளித்தாலும் அழுக்கு போகாத மனிதர்கள். வரலாற்றின் குப்பைத் தொட்டிகள். நிழல்தந்த மரத்தின் மீது எச்சமிட்டுப் போகிற தான் தோன்றிப் பறவைகள். எத்தனையோ பேர் இந்த இயக்கத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டுப்போனார்கள், ஆனாலும், இந்த இயக்கம் அழியவில்லை. போனவர்கள் எல்லாம் பத்தோடு பதினொன்று.. ஆனால், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி" எனத் தெரிவித்தார்.
வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்; மதுரவாயிலில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்#Chennai | #Traffic | #Maduravoyal pic.twitter.com/JxqRmvxf8t
— PttvOnlinenews (@PttvNewsX) December 10, 2025
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருக்கும் சுமார் 5000 பேருக்கு, காலை உணவு ஆவி பறக்கப் பரிமாறப்பட்டு வருகிறது. சைவ உணவுகளில் இனிப்பு வகைகளில் தம்ஃப்ரூட் அல்வா, பருப்பு பாயாசம்; பிரதானமாக வெஜ் பிரியாணி மற்றும் வெள்ளைச் சாதம்; குழம்பு வகைகளில் கத்தரிக்காய்-முருங்கக்காய் சாம்பார், வத்தல் குழம்பு மற்றும் தக்காளி ரசம்; புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல் மற்றும் சிறப்புச் சைட் டிஷ்களான மாவடு இஞ்சி மண்டி ஆகியவை உண்டு.
#JUSTIN | அதிமுக பொதுக்குழு - உணவு பட்டியல் வெளியீடு #Food | #FoodMenu | #ADMK | #AIADMK | #EPS | #EdappadiPalaniswami | #ADMKGeneralBodyMeeting pic.twitter.com/WauRJ6LqVP
— PttvOnlinenews (@PttvNewsX) December 10, 2025
அசைவம் உணவுகளில் இனிப்பு வகைகளில் பிரட் அல்வா, பருப்பு பாயாசம்; பிரதானமாக மட்டன் பிரியாணி மற்றும் வெள்ளைச் சாதம்; கறி வகைகளில் மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரை மீன் வருவல், முட்டை மசாலா மற்றும் தாளிச்சா ஆகியவை இடம்பெறுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை முன்னெடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக, பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாஜகவின் நீண்ட நாள் கோரிக்கையான கட்சி ஒருங்கிணைப்பு குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.