தகாத உறவு காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை
தகாத உறவு விவகாரம் காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கும், காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக். இவரது மனைவி ஜெயபாரதிக்கும், பாடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்தது.
இதற்கு இடையூறாக இருந்த கார்த்திக்கை தீர்த்து கட்ட, மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்தார் ஜெயபாரதி. அங்கு காத்திருந்த ஹரிகிருஷ்ணன், தன் நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்தார். கடந்த 2014ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாரதி உள்பட 4 பேரை மெரினா போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜெயபாரதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.