தரமற்ற குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்.. உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.!
தரமில்லாத குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடிநீர் கேன் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, சிலர் தரமில்லாத மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குடிநீரை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் குடிநீர் கேன் விற்பனையை கண்காணிக்கும்படி, அனைத்து மாவட்ட, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கேனை, 30 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது, பல முறை பயன்படுத்திய கேன்களில், தண்ணீரை விற்பனை செய்தால், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொடர்ந்து பலமுறை புகார்கள் வந்தால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய அறுவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கேனை 30 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமீறும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை.

