ஏசியில் மின்கசிவு: தூங்கிக் கொண்டிருந்த தம்பதியர் மீது தீப்பற்றி பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை ஆனையூர் அருகே இரவில் தூங்கி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, கணவன் மனைவி உயிரிழந்தனர்.
மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி. நகரைச் சேர்ந்த சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்ட நிலையில், புகை உருவாகியுள்ளது. இதனால் அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்றபோது தீ பற்றி எரிய தொடங்கி இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கூடல்புதூர் காவல் துறையினர் உடலில் வேறு ஏதேனும் காயங்கள் உள்ளதா, தற்கொலை முயற்சியா என்கின்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.