சாலமன் பாப்பையா மறைவு.. தலைவர்கள் இரங்கல்!
தமிழக முதல்வர் விஜய்
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு. பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல். சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சிரித்த முகம் -சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொண்ணாத் துயரும் அடைந்தேன். பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா
நடிகர் ரஜினிகாந்த்
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை
சிறந்த தமிழறிஞரும், பட்டிமன்றங்கள் மூலம் சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவருமான, பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துகளால் பட்டிமன்றங்களைச் சிறப்பித்த சாலமன் பாப்பையாவை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

