புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு - தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்
கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புதிய தலைமுறை, செய்தியாளர் சுரேஷ்குமார் மீது 505, 153ஏ, 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இயக்குநர் அமீர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய தலைமுறை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவு எனவும் வழக்குப் பதிவை போலீசார் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வழக்குப் பதிவு என்பது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனவும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு அரங்கத்திற்குள் நடந்த விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதும் ; அரசு இதில் அவசரம் காட்டுவதும் மிகவும் கண்டனத்திற்குரியது
என்று இந்திய குடியரசு கட்சியின் செகு.தமிழரசன் கூறியுள்ளார். மேலும், “ஊடகத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது என்பது சிறந்த ஜனநாயக நெறிமுறையாக இருக்க முடியாது. மக்களின் உணர்வுகளை மக்களுக்கு ஊடகங்களின் பங்கு மிக தேவையானது ; அவசியமானது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், “கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை மீது கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், “வட்டமேசை விவாதம் என்பது பல்வேறு கருத்துக்களை கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் இடம். விவாதத்தில் பலர் சொல்லும் கருத்துக்களுக்கு புதிய தலைமுறை பொறுப்பாக முடியாது” என்று கூறினார்.