நில மோசடி வழக்கு: அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்
தேனி மற்றும் பெரியகுளம் பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மற்றும் பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் அன்னபிரகாஷ், தனக்கு ஜாமீன் கோரி ஏற்கனவே மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இந்தநிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் முறையான சிகிச்சை பெற முடியாமல் சிறையில் அவதிப்படுகிறார். இதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
அரசுத்தரப்பில், 'தேவைப்படும் பட்சத்தில் மனுதாரருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நீதிபதி, அன்னபிரகாஷ்க்கு திருவண்ணாமலையில் 30 நாட்கள் தங்கியிருந்து, தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.