பாஜகவின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு பொது விடுமுறை; முதல்வருக்கு நன்றி - எல்.முருகன்
பாஜகவின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்த முதல்வருக்கு நன்றி என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத்திருவிழாவானது இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்தத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்கள் தொடர்ந்து என்னிடம் தைப்பூசத் திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் ஜனவரி 28 ஆம் நாளானது, பொதுவிடுமுறை நாளாகும்” எனத் தெரிவித்திருந்தார்.