ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா இன்னல்களிலும் நன்மை விளைவது போல, இந்த ஊரடங்கால் கிடைக்கப்பெற்ற நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பது தான். மகாத்மா காந்தி எந்த அளவுக்கு விடுதலைக்காக போராடினாரோ அதே அள்வுக்கு தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார்.
1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ராஜாஜி, அன்றைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, பின்னர் வட ஆற்காடு மற்றும் இன்றைய ஆந்திராவில் உள்ள சித்தூர், கடப்பா ஆகிய மாவடங்களுக்கு மதுவிலக்கை நீட்டித்தார். இந்திய வரலாற்றி ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் 1948ஆம் ஆண்டு மதுவிலக்கை கொண்டு வந்தவர் ஓமந்தூர் ராமசாமி. அந்த மதுவிலக்கைதான் 1971ஆம் ஆண்டில் கருணாநிதி அரசு நீக்கியது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தமிழகத்தின் அனைத்து தாய்மார்களின் சார்பில் தமிழக அரசை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.