கும்பகோணம் அருகே நர்சிங் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், தற்போது கொலை தொடர்பாக தேடப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருப்புறம்பியத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற நர்சிங் கல்லூரி 2 ஆம் ஆண்டு மாணவி, திருநாகேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 13 ஆம் தேதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த கீர்த்திகாவின் காதலரும், உறவினருமான சுபாஷ் சந்திர போஸ் என்பவரை காணாததால் அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸ் விஷமருந்தி ஆபத்தான நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சையில் இருப்பதால் சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்படவில்லை என்றும், அவரை விசாரித்த பின்னரே கீர்த்திகா கொலையின் மர்ம முடிச்சுகள் அவிழும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.