நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்றபோது உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணசாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதினார்.
உயிரிழந்த கிருஷ்ணசாமி அரசு ஊழியராக பணியாற்றி வந்தவர். எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மைத்துனர் அன்பரசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊரான விளக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.