கிருஷ்ணகிரி | நாய் கடித்ததை கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குப்பட்டி பஞ்சாயத்து தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் பிரியா (23) இவர், எம்பிஏ முடித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவரை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், நேற்று முன் தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவர் அதிகமாக கத்துவதும், கூச்சலிடுவதுமாக இருந்துள்ளார். இதன் காரணத்தால் மேல் சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.