கிருஷ்ணகிரி: கோலமாவு கல் எடுக்க நினைத்து மண் சரிவில் சிக்கிய 4 பெண்கள் - இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கோலமாவு கல் எடுக்க நினைத்து மண் சரிவில் சிக்கிய 4 பெண்கள் - இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கோலமாவு கல் எடுக்க நினைத்து மண் சரிவில் சிக்கிய 4 பெண்கள் - இருவர் உயிரிழப்பு
Published on

கிருஷ்ணகிரியில் ஓசுர் பகுதியையடுத்த சாமநத்தம் கிராமத்தில் மண் சரிந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மண் சரிவிலிருந்து மேலும் 2 பெண்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் தளி பகுதிக்கு அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். அப்படி மண் எடுத்தபோது 10 அடிக்கு கீழ் வெள்ளை நிற கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கற்களை பொடி செய்து கோலமாவு பயன்படுத்த ஆசைப்பட்ட சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகிய நான்கு பேர், இன்று அந்த பகுதிக்கு சென்று மேலும் குழி தோண்டியுள்ளனர். அப்படி அவர்கள் கற்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் நான்கு பெண்களும் மண்ணில் சிக்கிக் கொண்டனர்.

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த நபர்கள் இதைப் பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் ஊர் பொதுமக்கள் உதவியுடன் மண்ணில் சிக்கி கொண்ட நான்கு பெண்களை மண்ணை அகற்றி அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 2 பேரை மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மண் சரிவால் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- ம.ஜெகன்நாத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com