பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு

பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்:  மாணவர் எடுத்த சோக முடிவு

பரீட்சையில் சினிமா பாடல் எழுதியதை கிண்டல் செய்து பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.

போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் இளைய மகன் கார்த்திக் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தாவரவியல் ஆசிரியர் சகாதேவன் 12-ஆம் வகுப்பிற்கு தேர்வு வைத்துள்ளார். இதில் கார்த்திக், தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு, தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடலை பதிலாக எழுதியுள்ளார்.

தேர்வு முடிந்து விடைத்தாளை திருத்தும்போது மாணவர் எழுதிய பாடலை அனைத்து மாணவர்கள் முன்பும் படித்துக் காட்டி கிண்டல் செய்துள்ளார் ஆசிரியர். மேலும் அவ்வழியே வந்த வேதியியல் ஆசிரியர் மயில்வாகனனிடம் காட்டி கிண்டல் செய்துள்ளார். பின்னர் அனைத்து ஆசிரியர்களிடமும் இச்சம்பவத்தை தெரிவித்து கார்த்திக்கின் மதிப்பெண்ணை குறைப்பதாக இரு ஆசிரியர்களும் பேசியுள்ளனர்.

அப்போது கார்த்திக் இரு ஆசிரியரிடமும் இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இரு ஆசிரியர்களும் கார்த்திக்கை பள்ளியை விட்டு வெளியேறுமாறும் பெற்றோர்களை அழைத்துக்கொண்டுதான் பள்ளிக்கு வரவேண்டுமென கூறி அப்போதே பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து அழுது கொண்டே பள்ளியை விட்டு வெளியேறிய மாணவன் ஒட்டத்தெருவில் உள்ள அவனது வீட்டிற்கு சென்று தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தந்தை வந்ததும் பள்ளிக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என தாயார் சமாதானப்படுத்தியுள்ளார்ர். ஆனால் நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர் கிண்டல் செய்து பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com