கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அரசு தரப்பு அவகாசம் கேட்டதால் விசாரணை தள்ளிவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அரசு தரப்பு அவகாசம் கேட்டதால் விசாரணை தள்ளிவைப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அரசு தரப்பு அவகாசம் கேட்டதால் விசாரணை தள்ளிவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்களாக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்,

இவ்வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளதால் 720 சிடிஆர் (கால் டீடைல்ஸ் ரெக்கார்டு) விவரங்கள் சேகரிக்கும் பணி மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள 316 சாட்சிகளிடம் கூடுதல் விசாரணை, மற்றும் பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணை நடைபெற வேண்டியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அவகாசம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 27.01.2023.க்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே சயான், வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில். டிஎஸ்பி அண்ணாதுரை. டிஎஸ்பி சந்திர சேகர். டிஎஸ்பி வினோத், ஆய்வாளர்கள் தனலட்சுமி. வேல்முருகன் சைபர்கிரைம் மாதவன் உள்ளிட்டோர் புலனாய்வு விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம், சிபிசிஐடி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலவரங்கள் குறித்து விளக்கங்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 27.01.2023-க்கு தள்ளி வைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com