கொடநாடு காவலாளி கொலை வழக்கை சுற்றி மர்மங்கள் நீள்கின்றன. இதுதொடர்பாக கேரளாவின் பல பகுதிகளைச் சேர்ந்த 8 பேரை கோவைக்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றிவந்த ஓம்பகதூர் கடந்த 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் காயத்துடன் கிடந்தார். இவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்தார். இவர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றியவர். கனகராஜூக்கு நெருக்கமானவரான சயான் என்பவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் அவரும் பாலகாட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் கேரளாவின், வயநாடு, மலப்புரம், திருச்சூர் பகுதிகளைச் சேர்ந்த 8 பேரை அங்குள்ள தனியார் விடுதியில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.