பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பலகோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.