கீழடி அகழாய்வில் குறைபாடுகள் உள்ளது.. மத்திய அரசு சொன்னது என்ன?
கீழடி அகழாய்வில் குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆய்வறிக்கையை அங்கீகரிக்காமல் திருத்தம் செய்ய கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துள்ளார். அதில், கீழடி அகழாய்வு அறிக்கை துறைசார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளதாகவும், கீழடி அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள், கால வரிசை, விரிவான பகுப்பாய்வு போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என்றார். இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ, அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கமோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கிடையே கீழடியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த பகுதியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.