கீழடியில் நூற்றுக்கணக்கான புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு
5ம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் ஒரு சுவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் சிற்பம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ம் தேதி தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் மேலும் ஒரு தொன்மையான சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்களும் கிடைத்துள்ளன. முதன் முறையாக ஆய்வில் ஜிபிஎஸ் (GPS) கருவி பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர்.