அதிர்ச்சி! கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் அத்தையாக நடித்தவர் கொலை; பெற்ற மகனே செய்த செயல்!

உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தர மறுத்த பெற்ற தாயை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயை கொன்ற மகனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த காசம்மாள்
உயிரிழந்த காசம்மாள்pt web

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்ச்சாமி. இவரது மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான காசம்மாள், கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் நமகோடி, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாய் தந்தை வீட்டிலேயே வசித்து வருவதாகவும், மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாகமாக உயிரிழந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காசம்மாளைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் காசம்மாள்-ன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் நமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது அருந்த பணம் தர மறுத்த தாயை மகன் கட்டையால் அடித்து படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com