கரூர் துயரம்| சிபிஐ அலுவலகம் கொண்டுசெல்லப்பட்ட விஜய் பரப்புரை பேருந்து!
2025 ஆம் ஆண்டு கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், விஜய் பயன்படுத்திய பேருந்து சிபிஐ அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
கரூரில் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தவெக அதிகாரிகள் சமீபத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்தசூழலில் தற்போது கரூர் நெரிசலின் போது தவெக தலைவர் விஜய் பயன்படுத்திய பேருந்தும் ஆய்வுக்காக சிபிஐ அலுவலகம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது..
தமிழக வெற்றி கழகம் சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்வு கரூரில் ந்டந்தபோது 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே தவெக பனையூர் தலைமை அலுவலகத்தில் சிபிஐ ஆய்வு செய்திருந்தனர்.
அந்தவகையில் இன்று விஜய் பயன்படுத்திய பேருந்தை சி.பி.ஐ அலுவலகம் வர வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கரூர் சி.பி.ஐ அலுவலகம் சர்க்கியூட் ஹவுஸ் கொண்டு சென்றனர்.
பேருந்து நீளம், அகலம் எவ்வளவு அதனை சுற்றி எவ்வளவு பேர் நிற்க முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சிபிஐ அதிகாரிகள் பேருந்து எடுத்து வர உத்தரவிட்டிருந்தனர். இன்று ஒரு நாள் சிபிஐ அதிகாரிகள் பேருந்து ஆய்வு செய்து, பின்னர் இன்று மாலையே சென்னைக்கு அனுப்பி விடுவார்கள் என சொல்லப்படுகிறது.

