கரூரில் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு வீதியில் கால்வாய் நீரிலேயே கலவையை கொட்டி தளம் அமைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நடந்தது என்ன என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணியின் போது கழிவுநீர் கால்வாயிலேயே கலவையை கொட்டி சாக்கடை தளம் அமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து அதிர்ச்சி அடைந்த பலரும் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கழிவு நீரில் கலவையைக் கொட்டி கடமைக்கு சாக்கடை அமைப்பதாக குற்றம் சாட்டினர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்று மற்றும் மூன்றாவது வார்டுக்குட்பட்ட கே.ஏ.நகர். பகுதியில், புதிதாக கட்டப்பட்ட சாக்கடை தெரிந்தது.
இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது அந்த பகுதியில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர் சாக்கடை கட்டப்பட்டதாகவும், வாட்டம் சரியில்லாத காரணத்தால் தண்ணீர் வெளியேறாமல் நின்றதாகவும் அந்த பகுதி மக்கள் குறை கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து புதிதாக சாக்கடையின் தளத்தை உயர்த்தி தண்ணீர் வெளியேறும் வகையில் செய்ய திட்டமிட்டு இதற்காக அந்த வீதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவு நீரை சாக்கடையில் வெளியேற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டு ஏற்கனவே சாக்கடையில் இருந்த நீரை சுத்தப்படுத்திவிட்டு லாரியில் இருந்து பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து சாக்கடை தளத்தை சுத்தப்படுத்தி, கலவை கொண்டு தளத்தை அமைத்துக் கொண்டிருந்தபோது, அந்த வீதியில் உள்ள குடியிருப்புவாசி ஒருவர் தனது வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய் திறந்து விட்டார்.
இதன் காரணத்தால் தளம் அமைக்க கலவை கொட்டும் போது தண்ணீர் அதிகமாக சாக்கடையில் வந்தது உடனடியாக நாங்க அந்த வீட்டுக்காரரிடம் முறையிட்டு தண்ணீரை சுத்தப்படுத்தி தளம் அமைக்கப்பட்டது என தெரிவித்தனர்.