கரூர்: இறந்த மனைவியின் சடலத்துடன் போதையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் - போலீசார் விசாரணை
கரூர் அருகே வீட்டுக்குள் மனைவி உயிரிழந்த நிலையில் கிடக்க அவர் அருகே போதையில் தூங்கிய கணவனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைத்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ள நிலையில், மாலதி மாயனூரில் உள்ள தாய் தமிழரசியின் வீட்டில் மகன் ஆசித்துடன் வசித்து வந்தார். தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனசேகரன் தனது மகனையும் மனைவியும் பார்க்க மாயனூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வந்துள்ளார். நேற்று வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனசேகரன் அதிகமான போதையில் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலை வீட்டிற்குள் இருந்த சிறுவன் ஆசித்தின் அழுகுரல் தொடர்ந்து கேட்கவே அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மாலதி இறந்து கிடந்துள்ளார். அருகில் போதையில் தனசேகரன் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாயனூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாலதி உயிரிழந்த கிடந்த அறையில் உள்ள மின்விசிறியில் மாலதியின் துப்பாட்டா மாட்டியிருந்தது இதனால், மாலதி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும், அவரது உடல் தரையில் கிடந்தது எப்படி என சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, போதையில் இருந்த தனசேகரனை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். மனைவியின் சடலத்துடன் கணவர் போதையில் தூங்கியதைக் கண்டு மாயனூரில் போலீசார் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.