கரூரில் 295 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கரூர் காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, 17.45 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி கட்டும் பணி தொடங்கியது. 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய, 850 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையுடன் கூடிய கல்லூரி கட்டும் பணிகள், 295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று நிறைவடைந்தன.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச்செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியின்போது, கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் இருந்தனர். மருத்துவக் கல்லூரி திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூரில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. கரூரில் அமைந்துள்ள இந்த மருத்துவக்கல்லூரி தமிழகத்தின் 23 ஆவது அரசு மருத்துவக்கல்லூரி ஆகும்.